சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாநில அளவிலான நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி புராதன சின்ன ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோபுரங்களைச் சுற்றி பூங்கா அமைப்பது உள்ளிட்ட பணிகள், மாநில அளவிலான நிபுணர் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்கக் கோரி அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதியின்றி கோவிலுக்குள் மண்டபம் கட்டப்பட்டுள்ளதாகவும், பரதநாட்டிய அரங்கம் கோசாலையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறநிலையத்துறை தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த பொது தீட்சிதர்கள் தரப்பு, புதிய கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ள மாட்டோம் என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருப்பதாக விளக்கம் அளித்தது.

விசாரணையின் போது, உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற தலைமை இணை இயக்குநர் நம்பிராஜன் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட புராதன சின்ன ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புராதன கோவில்கள் மற்றும் பாரம்பரிய கட்டிடங்களில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் மற்றும் அவற்றுக்கான அனுமதிகள் தொடர்பான விவகாரங்களை இந்த ஆணையம் பரிசீலிக்கும் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாநில அளவிலான நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி புராதன சின்ன ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version