விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்ற நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக தொடங்கியது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீ ஆண்டாளின் அவதார பூமியாக பக்தர்களால் போற்றப்படுகிறது.

மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் ஆண்டாள், பெரியாழ்வாரின் மகளாக பூமியில் அவதரித்து, இறைவனுக்காக பூமாலையும் பாமாலையும் அர்ப்பணித்து இறுதியில் அரங்கநாதரை அடைந்ததாக வைணவ மரபில் நம்பப்படுகிறது. ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் திருவிழா தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்களை ஈர்க்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வாக உள்ளது.

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதையொட்டி ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் நான்கு மாத வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கருடன் உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடி, பட்டாச்சாரியார்களால் கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக 10ஆம் தேதி ஐந்தாம் திருநாளில் ஐந்து கருட சேவையும், 12ஆம் தேதி ஆண்டாள் மடியில் தலை வைத்து ரங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும் நடைபெறுகிறது. பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் திரு ஆடிப்பூர தேரோட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

விழா நடைபெறும் நாட்களில் ஆண்டாள், ரங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகர் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். கொடியேற்ற நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்புக்காக டிஎஸ்பி தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version