கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெங்கடதாம்பட்டி கிராமத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
வெங்கடதாம்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் பழமை வாய்ந்த மாரியம்மன் ஆலயத்தைப் புதுப்பிக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, திருப்பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, கோவில் கோபுரங்கள் மற்றும் பிரகாரங்கள் புதிய பொலிவுடன் கட்டியெழுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆன்மீக விழா அரங்கேறியது.
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கணபதி வழிபாட்டுடன் யாகசாலை பூஜைகள் முறைப்படி தொடங்கின. இரண்டு காலங்களாக நடைபெற்ற இந்த யாக வேள்வியில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம் மற்றும் வாஸ்து சாந்தி உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, மகா பூர்ணாஹுதி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்பகுதி பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க, வானில் கருடன் வட்டமிட, சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை ஏந்தி வந்தனர். பின்னர் ஆலயத்தின் விமானக் கலசங்கள் மற்றும் மூலவர் மாரியம்மனுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்த விழாவில் வெங்கடதாம்பட்டி, புதூர், சோலகாப்பட்டி, படப்பள்ளி, புதுக்காடு, காந்திநகர் மற்றும் ஊத்தங்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கோம்பு குலதெய்வ பங்காளிகளும், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகை தந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்துகொண்டு அம்மனைத் தரிசித்தனர்.
விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை வெங்கடதாம்பட்டி ஊர் பொதுமக்களும் விழா குழுவினரும் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். மேலும், விழாவில் பங்கேற்ற ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் மதிய உணவு மற்றும் பிரசாதங்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டன.
