திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், நேரடி இலவச சர்வ தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் வரிசை வைகுண்டம் காத்திருப்பு அறைகளைத் தாண்டி, ஷீலா தோரணம் வரை சுமார் 3 கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டிருந்தது. மூன்றாவது நாளாக தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால், திருமலை முழுவதும் பக்தர்கள் அலைமோதினர்.
கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், தேநீர், காபி மற்றும் பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 90,130 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 38,075 பேர் முடி காணிக்கை செலுத்திய நிலையில், உண்டியலில் ரூ.4.13 கோடி காணிக்கையாக வசூலாகியுள்ளது. மேலும், 4.24 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன.
