திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா இன்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா இன்று தொடங்கிய நிலையில், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
கடந்த 4-ஆம் தேதி ஆடி அஸ்வினி நட்சத்திரத்துடன் தொடங்கிய திருவிழா, நேற்று ஆடி பரணி விழாவுடன் தொடர்ந்தது. அதன் உச்ச நிகழ்வாக இன்று அதிகாலை 5 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தங்கக் கவசம், பச்சைக்கல் பதித்த வைரமாலை அணிவித்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன.
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில் புனித நீராடி, பால் காவடி, பன்னீர் காவடி, மலர் காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை ஏந்தியும், அலகு குத்தியும், “அரோகரா” முழக்கத்துடன் மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டனர்.
இன்று மாலை நடைபெறும் முதல் நாள் தெப்பத் திருவிழாவில், மலைக்கோயிலின் காவடி மண்டபத்திலிருந்து உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தேர் வீதிகளில் உலா வந்து, மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த தெப்ப உற்சவம் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
பெருமளவில் பக்தர்கள் திரண்டதால், சுவாமி தரிசனம் செய்ய சுமார் ஐந்து மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 1,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், குடிநீர், மருத்துவ உதவி, கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
