திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில்
அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு எட்டாவது நாள் இரவு உற்சவத்தில், சின்ன நடராஜர் மற்றும் பராசக்தி அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக மகா தீபாரதனை நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 8 ஆம் தேதி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் அம்பாளுடன் சந்திரசேகரர் கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருவது வழக்கம்.
அதன்படி எட்டாவது நாள் இரவு உற்சவத்தில் சின்ன நடராஜர் மற்றும் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
