சேலம் குகை மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோயிலின் ஆடிப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, பாரம்பரியம் மிக்க ‘வண்டி வேடிக்கை திருவிழா’ விமரிசையாக நடத்தப்பட்டது.
இந்த விழாவில் முருகன், கருப்புசாமி, அஷ்டலட்சுமிகள், ஐயப்பன், புரதத்தம்மன், மாரியம்மன், குபேரன் மற்றும் சமயபுரத்து அம்மன் போன்ற பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து, கண்கவர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மேளதாளங்கள் முழங்க தங்களது நேர்த்திக்கடனை அவர்கள் செலுத்தினர்.
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு, வண்டி வேடிக்கை ஊர்வலத்தைக் கண்டு மகிழ்ந்தனர்.
விழாவின்போது வழிப்பறி, செயின் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்களைத் தடுத்தல் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மகேந்திரன் தலைமையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
