தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவின் சிகர நிகழ்வான சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கு காட்சி அளிக்கும் வைபவம் செவ்வாய்க்கிழமை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இந்த நிகழ்வைக் காண தென்காசி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

கடந்த ஜூலை 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடித்தபசு திருவிழாவில், தினமும் பல்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான கோமதி அம்மன் தேரோட்டம் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், இன்று 11-வது திருநாளில் ஆடித்தபசு காட்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலை முதலே கோவிலில் சங்கரநாராயண சுவாமி, கோமதி அம்மன் மற்றும் சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் மதியம் கோமதி அம்மன் தங்கச் சப்பரத்தில் தெற்கு ரதவீதியில் அமைந்துள்ள ஆடித்தபசு மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

மாலை 4.30 மணியளவில் சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்காக புறப்பட்டு, மாலை 6.45 மணியளவில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, ஒற்றைக்காலில் தவக்கோலத்தில் இருந்த கோமதி அம்மனுக்கு அருள்காட்சி அளித்தார். இந்த அரிய ஆன்மிக நிகழ்வை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர். “அரோகரா” முழக்கங்கள் முழங்கிய நிலையில், கோவில் வளாகம் முழுவதும் பக்தி உணர்வு பொங்கியது.

இந்நிகழ்வைத் தொடர்ந்து இரவு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி, கோமதி அம்மனுக்கு காட்சி அளிக்கும் மற்றொரு சிறப்பு வைபவமும் நடைபெறுகிறது.

ஆடித்தபசு விழாவையொட்டி, பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டிருந்தன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.இந்த சிறப்பு திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version