இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் புனித நீராடி, முருகனை வழிபட பக்தர்கள் அலையென குவிந்து வருகின்றனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தலமாகும். சூரபத்மன் வதம் செய்து முருகன் வெற்றி பெற்ற இடம் என்பதால் இங்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. தினசரி நூற்றுக்கணக்கானோரும், விடுமுறை மற்றும் சிறப்பு நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இங்கு வந்து சுவாமி தரிசனம் பெறுகின்றனர்.
ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும் இந்தக் கோயிலில், முருகன் அவதரித்ததாகக் கருதப்படும் வைகாசி மாத விசாக நட்சத்திர நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு மே 30, 2026 அன்று வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. முருக பக்தர்கள் இந்நாளை முன்னிட்டு விரதம் அனுஷ்டித்து, திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
அலகு குத்துதல், பால் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு வகையான காவடிகளுடன் பக்தர்கள் நீண்ட தூரம் நடந்து வருகின்றனர். இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து பல்வேறு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மாலையில் ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சுவாமி வசந்த மண்டபத்தை 11 முறை வலம் வரும் நிகழ்வும், முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் முக்கிய நிகழ்ச்சியும் இன்று நடைபெறுகின்றன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே கடலில் புனித நீராடி, அருகிலுள்ள நாழிக்கிணற்றில் குளித்துவிட்டு குடும்பத்துடன் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் திருச்செந்தூர் நகரம் பக்தர் கூட்டத்தில் அலைமோதுகிறது. ‘அரோகரா’ கோஷம் எங்கும் எதிரொலிக்கிறது. பக்தர்களின் வசதிக்காக மூவர் சமாதி, வள்ளி குகை உள்ளிட்ட இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகள், நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 14,500 சதுர அடி நிரந்தர கொட்டகை மற்றும் 8,000 சதுர அடி தற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து, குறிப்பாக நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு, மருத்துவ முகாம்கள், கடல் பாதுகாப்புக் குழு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன. இந்த வைகாசி விசாகத் திருவிழா முருக பக்தர்களின் பக்தி உணர்வை உச்சத்துக்கு கொண்டு செல்லும் நாளாக அமைந்துள்ளது.

