புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோயில் பல்லவன் குளக்கரையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் காவிரித் தாயை வணங்கி வழிபட்டதுடன், புதுமண தம்பதிகள் தாலி பெருக்கி அணிந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதல் நீர்நிலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் காவிரித் தாயை வணங்கும் வகையில் அனைத்து விதமான பழங்கள் வைத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அனைத்து வளமும் பெருக வேண்டி மஞ்சள் கயிறுகளை கழுத்து மற்றும் கைகளில் கட்டி இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் புதுமண தம்பதிகளும் திருமணத்தன்று அணிந்த மாலைகளை நீர் நிலைகளில் விட்டு தாலி பிரித்து கட்டி வணங்கி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட கீழராஜ வீதி அருகே உள்ள சாந்தராமன் கோயில் பல்லவன் குளக்கரையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட காலை முதல் ஏராளமான பெண்கள் குவிந்தனர்.
அவர்கள் சாமி தரிசனம் செய்ததோடு, அனைத்து வளமும் பெருக வேண்டி மஞ்சள் கயிறுகளை கழுத்து மற்றும் கைகளில் கட்டி இந்த விழாவை கொண்டாடினர்.
அதேபோல் புதுமண தம்பதிகள் தாலி பிரித்து கட்டிக்கொண்டனர்.

