விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. தென் தமிழகத்தில் சக்தி வழிபாட்டுத் தலங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள இவ்வாலயம், வைப்பாறு மற்றும் அர்ச்சுனா ஆறு ஆகிய இரு புனித நதிகளுக்கு இடையே அமைந்துள்ள சிறப்புமிக்க திருத்தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
இக்கோயிலில் ஆடி, தை, பங்குனி, சித்திரை மாதங்களில் நடைபெறும் வழிபாடுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுவதால், இந்த காலகட்டத்தில் பக்தர்களின் வருகை அதிகரிக்கும். திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் விரதமிருந்து பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.
அக்னி சட்டி ஏந்துதல், பால்குடம் எடுத்தல், ஆயிரம் கண் பானை செலுத்துதல், அலகு குத்துதல், முடி காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்து வழிபடுதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர். விழா நாட்களில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும்.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழா ஒரு வார காலம் சிறப்பாக நடைபெறும். இதையொட்டி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த ஆண்டுக்கான திருவிழா தொடக்கமாக நேற்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதிகாலை 4 மணியளவில் அம்மனுக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட 21 வகையான திவ்யப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் சிவாச்சாரியார்கள் கொடிக்கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து திருவிழா கொடியை ஏற்றினர். நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோயில் செயல் அலுவலர் இளங்கோவன், அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, கே.மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, அப்பனேரி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நடைபெற உள்ள விழா நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

