காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலுத்து தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவகாமி சமேத நடராஜர் திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ தும்பவனத்தம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி மாத திருவிழா, இந்த ஆண்டும் பக்தி பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
ஆடி மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில், ஸ்ரீ தும்பவனத்தம்மன் 30 திருக்கரங்களுடன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் எழுந்தருளிய அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோயிலில் திரண்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ தும்பவனத்தம்மனின் ஆடி மாத திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரகாட்டம், தாரை தப்பட்டை, பேண்ட் வாத்தியங்கள், பம்பை இசை முழங்க உற்சவ மூர்த்தி கோயிலிலிருந்து புறப்பட்டு கோட்ராம்பாளையம் தெரு, ரங்கசாமி குளம், நாகலத்து மேடு, நாகலுத்து தெரு, மந்தவெளி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வீதி உலாவின் போது வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை செய்து, தேங்காய் உடைத்து, மலர் தூவி அம்மனை பக்தியுடன் வழிபட்டனர். பெண்கள் குலவையிட்டு அம்மனை வரவேற்றதுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை திரளானோர் உற்சவத்தில் கலந்து கொண்டு ஆன்மிக பரவசத்தை வெளிப்படுத்தினர்.
ஆடி மாதத்தில் நடைபெறும் இந்தத் திருவிழா, காஞ்சிபுரம் நகரின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்மனை மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் தரிசித்தால் குடும்ப நலன், ஆரோக்கியம் மற்றும் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
