பொதுவாக தமிழ்நாட்டில் சிவன் கோயில்களில் அனைத்து கிரங்களுக்கும் சேர்த்து தனி சன்னதிகள் அமைக்கப்படுவது உண்டு. அதேப் போல ஒவ்வொரு கிரகங்களுக்கான பரிகாரங்கள் ஒவ்வொரு கோயிலில் செய்யப்படுவது உண்டு. அந்த வகையில், ராகு பகவானுக்குரிய பரிகாரத் தலங்களில் மிக முக்கியமானது திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில்.
மங்கள ராகு :
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது இக்கோயில். பொதுவாக மற்ற கோவில்களில் ராகு பகவான் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பார். ஆனால், திருநாகேஸ்வரத்தில் தனது தேவியர்களான நாகவல்லி மற்றும் நாககன்னியுடன் ’மங்கள ராகு’ என்ற சாந்தமான கோலத்தில் காட்சி தருகிறார்.
கோயிலின் சிறப்புகள் :
பெரும்பாலும் மனித தலை மற்றும் பாம்பு உடல் கொண்ட உருவமாகவே ராகுவை காண முடியும். ஆனால், இத்தலத்தில் ராகு பகவான் மனித வடிவில் தனி சன்னதியில் அருள்பாலிப்பது சிறப்பு.
அம்பாள் சன்னதி : இக்கோவிலில் அன்னை கிரிகுஜாம்பிகை மூன்று விதமான அலங்காரங்களில், அதாவது காலையில் சிறுமி, மதியம் இளம்பெண், மாலையில் பெண்ணாக காட்சியளிப்பது தனிச்சிறப்பு.
தேவாரத் தலம்: சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற காவிரி தென்கரைத் தேவாரத் தலங்களில் இது 29-ஆவது தலமாகும்.
பரிகாரம் : ஜாதகத்தில் ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவது மிகச்சிறந்த பரிகாரமாகக் கருதப்படுகிறது.
திருமண தடைகள் : நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், மங்கள ராகுவை வழிபட்டால் விரைவில் மங்கல காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.
தோஷ நிவர்த்தி : நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம் மற்றும் களத்திர தோஷங்கள் நீங்கவும், மாங்கல்ய பலம் அதிகரிக்கவும் பக்தர்கள் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். ராகு காலத்தில் இந்த வழிபாடு மிகவும் விஷேசம்.
