ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ புலிவலத்து அம்மன் கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு நறுமணப் பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, வண்ண மலர் மாலைகள், பட்டுப் புடவைகள் மற்றும் தங்க நகைகளால் அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இவ்விழாவில் புலிவலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர். மேலும், மாவிளக்கு ஏற்றியும், நெய்தீபம் கொளுத்தியும் தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தி அம்மனின் அருளைப் பெற்றுச் சென்றனர்.
