புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் உள்ள ஸ்ரீஆத்மநாதசுவாமி கோவில் ஆனி மாத திருமஞ்சன திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.10,000-க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆத்மநாதா, மாணிக்கவாசகா என முழங்கி தேரை வடம் பிடித்து இழுத்தனர்..

உலக புகழ்பெற்றதும், மிகவும் பழமை வாய்ந்த மற்றும் சிறப்பு வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான ஆவுடையார்கோவில் யோகாம்பாள் சமேத  ஸ்ரீ ஆத்மநாதசாமி ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆனி மாத திருமஞ்சன திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதே போன்று இந்த ஆண்டு ஆனி மாத திருமஞ்சன திருவிழாவானது கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பல்வேறு வாகனங்களில் மாணிக்கவாசகர் வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருமஞ்சன திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. விழாவினையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாணிக்கவாசகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

தேர் சக்கரத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் தேங்காய் உடைத்து,தேர் வடத்தை தொட்டு தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து ஆவுடையார்கோவில் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஆத்மநாதா, மாணிக்கவாசகா என்று பக்தி கோஷம் எழுப்பியும், தேவாரம் திருவாசகப் பாடல்களை பாடியும் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருத்தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து பின்பு தேரடியை அடைந்தது. திருத்தேரோட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள்,ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அறந்தாங்கி மற்றும் ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version