திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் புனித நீராடி, பின்னர் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், சொந்த ஊரில் புதிய வீடு கட்ட உள்ள சில பக்தர்கள், கோவில் முன்புள்ள கடற்கரையில் இருந்து ஒரு கைப்பிடி மணலை எடுத்துச் சென்று, பூமி பூஜை நடைபெறும் நாளில் அந்த மணலை பூஜையில் சேர்த்து வைத்து கட்டுமானப் பணிகளை தொடங்குகின்றனர்.
முருகப்பெருமானின் திருவடிகள் பட்ட புனித நிலத்தின் மணலை பயன்படுத்தி வீடு கட்டத் தொடங்கினால், அந்த வீடு செல்வச் செழிப்புடனும், இறையருளுடனும் அமையும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல், கோவில் முன்புள்ள கடலில் இருந்து புனித நீரையும் எடுத்துச் சென்று, பூமி பூஜையின்போது பயன்படுத்தும் வழக்கமும் பக்தர்களிடையே இருந்து வருகிறது.
இந்த நம்பிக்கை வழக்கத்தை பல பக்தர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
