தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்கள் மலையின் மேல் தான் அமைந்துள்ளன. அதிலும் ஒரு சில கோயில்களில் படிகள் இருக்காது. மலையின் அழகை ரசித்துக் கொண்டே டிரக்கிங் போல அந்த கோயில்களுக்கு செல்ல வேண்டும். அப்படியான ஒரு கோயில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது இந்த சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். மாதந்தோறும் அமாவாசை பௌர்ணமி காலங்களில் மட்டுமே பக்தர்கள் மலையேறு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம் தேதி பக்தர்கள் நாள்தோறும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சதுரகிரிக்கு படையெடுக்கத் தொடங்கினர். இதனை எதிர்த்து மீண்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்ரம் முந்தைய நடைமுறை படி மாதத்தில் அமாவாசை, பௌர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்படும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்தது. அதன்படி சனிப்பிரதோஷமான இன்று சதுரகிரிக்கு செல்ல அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்தனர். காலை 6 மணிக்கு நுழைவு வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை. மாலை 4 மணிக்கு சுந்தர-சந்தன மகாலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
