காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், பஞ்சபூத தலங்களில் நிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப் பழமையான தலமாக விளங்குகிறது. சுமார் 3,500 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த புனிதத் தலத்தில் உற்சவ காலங்களில் பயன்படுத்த வெள்ளித் தேர் மற்றும் மரத்தேர் (மகாரதம்) உள்ளன. பக்தர்கள் நீண்ட காலமாக தங்கத் தேர் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று, காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடன் ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில் புதிய தங்கத் தேர் தயாரிக்கப்பட்டது.
25 அடி உயரமும், 13 அடி அகலமும் கொண்ட இந்தத் தேர் 22 கிலோ 306 கிராம் தங்க முலாம் பூசிய தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.30 கோடி செலவில் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்தத் தேர், வெள்ளோட்டம் நடத்தப்பட்ட பின்னர் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கத்தேரை பல்வேறு கட்ட அளவீடு, மதிப்பீடு மற்றும் சோதனைகளுக்கு உட்படுத்தி ஏற்றுக்கொண்டனர்.
வருகிற 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் இந்தப் புதிய தங்கத் தேரில் சிறப்பு அலங்காரத்துடன் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் எழுந்தருளி ஊர்வலம் நடைபெற உள்ளது. 108 தவில்-நாதஸ்வர வித்வான்கள் இசைக்க, 1,000 சிவனடியார்கள் சிவ வாத்தியங்கள் ஒலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் காவடி குழு, கொங்கு மண்டல கும்மியாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் காஞ்சிபுரத்தின் நான்கு ராஜ வீதிகளிலும் விமரிசையாக தங்கத் தேர் ஊர்வலம் நடைபெறும்.
காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய சங்கராச்சாரியார் ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ஆர்.வீ. ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்து ஊர்வலத்தை தொடங்கி வைக்கின்றனர்.
மடாதிபதிகள், ஆதீனகர்த்தர்கள், ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி மற்றும் உறுப்பினர்கள், கோயில் அறங்காவலர் குழு தலைவர் எம்.வி.எம். வேல்மோகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளனர். கோயில் செயல் அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் கதிரவன் ஆகியோர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தத் தங்கத் தேர் ஊர்வலம் காஞ்சிபுரத்தின் பாரம்பரியப் பெருமையை மேலும் உயர்த்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

