பிரதோஷம் :
சிவனை வழிபடுவதில் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதில் ஒன்று தான் பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிரை திரயோதசி திதியில் பிரதோஷ நாள் வருகிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு 3 நாட்களுக்கு முன் வரும். அந்த வகையில், ஒரு மாதத்தில் இருமுறை பிரதோஷ தினங்கள் வரும். திரயோதசி திதி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது.
இந்த பிரதோஷ நாட்களில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
பிரதோஷ வரலாறு :
அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் வைத்து திருபாற்கடலை கடைந்தனர். தேவர்களும், அசுரர்களும் இரு பக்கமும் நின்று இழுக்க, மலையில் உடல் அழுந்தி ஏற்பட்ட வலியால் வாசுகி பெருமூச்சு விட்டது. அது விஷமாக மாறி கடலில் கலந்து, ஆலகால விஷமாக வெளிப்பட்டது.
பிரபஞ்சத்தையே அழிக்கும் ஆற்றல் கொண்ட ஆலகால விஷத்தால் உலக உயிர்கள் அனைத்தும் துன்பப்பட்டன. உலகை காக்கும் பொருட்டு சிவபெருமான், அந்த ஆலகால விஷத்தை அருந்தினார். அந்த விஷம் உடலில் இறங்காமல் இருக்க, சிவபெருமான் கழுத்தின் தொண்டை பகுதியை பார்வதி தேவி அழுத்தி பிடித்தார். இதனால் விஷமானது, சிவபெருமானின் தொண்டையிலேயே நின்று விட்டது.
விஷத்தின் வீரியம் காரணமாக, சற்று மயங்கிய நிலையில் இருந்த சிவபெருமான் விழித்துக்கொண்டு, தன் வாகனமான நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நடனமாடினார். அவ்வாறு நடனமாடிய நேரத்தைத் தான் பிரதோஷ நேரமாக கணக்கிட்டு வழிபடப்படுகிறது. சிவபெருமன் ஆலகால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை எனக் கருதப்படுகிறது. ஆகையால் சனிப் பிரதோஷம் என்பது சிறப்பானது.
விரத முறை :
பிரதோஷ தினத்தில் விரதம் இருப்பவர்கள், அதிகாலையில் எழுந்து நீராடி, திருநீறு அணிந்து சிவாலயங்களுக்கு சென்று வழிபட வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான ‘சிவாய நம’ ஓதி வழிபடுவது சிறந்தது. மற்ற நாட்களில் வரக்கூடிய பிரதோஷ நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வதைவிட சனிப் பிரதோஷம் அன்று விரதம் இருந்து வழிபட்டால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சனிப் பிரதோஷ பலன்கள் :
சனிப் பிரதோஷம் அன்று, விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு பாவங்கள் நீங்கி புண்ணியம் சேரும், இந்திரனுக்கு நிகரான செல்வாக்கு கிடைக்கும். வறுமை நீங்கி, வசந்தம் உண்டாகும். பிரதோஷ வேளையில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் முழுவதும் ஆலயம் சென்ற பலன் கிடைக்கும். அதே வேளையில் சனிப் பிரதோஷத்தன்று சிவாலயம் சென்று வழிபட்டால் ஐந்து ஆண்டுகள் ஆலயம் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

