திருப்பத்தூர் மாவட்டம் பசலிகுட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய முருகர் கோயிலில், ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்த நாளாகக் கருதப்படுவதால், திருப்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.
தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காகவும், நிறைவேற வேண்டியும் பக்தர்கள் காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், மொட்டை அடித்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வேண்டுதல் மாலை அணிவித்து முருகப் பெருமானை தரிசித்து வழிபட்டனர்.
மேலும், இவ்விசேஷ நாளை முன்னிட்டு சிவன்–பார்வதி வேடமணிந்த கலைஞர்கள் ஆன்மிக நடன நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களை வெகுவாகக் கவர்ந்ததுடன், பக்தி உணர்வையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது.
