வைகாசி விசாக மாதத்தில் அறுபடை வீடுகளின் வரலாற்றை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்..

1. திருப்பரங்குன்றம்:

முருகப்பெருமானின் முதல்படை வீடு திருப்பரங்குன்றம். மதுரையில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம் திருக்கோயில். சூரபத்மனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தேவர்களை அந்த அசுரனை வதம் செய்து விடுவித்தார் முருகபெருமான். அதற்கு நன்றி செலுத்தும் இதமாக தேவேந்திரன் தன்னுடைய மகளான தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார். அப்படி முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற சிறப்பு மிக்க தலம் இது. இங்கு தனது மனைவி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சிதருகிறார் முருகப் பெருமான்.

2. திருச்செந்தூர்:

அறுபடை வீடுகளில் இரண்டாம் திருத்தலம் திருச்செந்தூர். தூத்துக்குடியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருச்செந்தூர். மேலும் கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரே திருக்கோயிலும் இதுதான். பொதுவாக முருகனின் கோயில்கள் அனைத்தும் ஏதாவது ஒரு குன்றின் மீதுதான் அமைந்திருக்கும். ஆனால் திருச்செந்தூர் திருத்தலம் சமதளத்தில் அமைந்திருப்பதாக பலரும் கூறுவர். ஆனால் இந்த இடமும் முற்காலத்தில் குன்றாக இருந்ததாகவும், பின்னாளில் கடல்மட்ட உயரம் காரணமாக சமதளமாக மாறிப்போனதாகவும் சில ஆய்வுகள் சொல்கின்றன. சூரபதுமனை முருகப்பெருமான் வதம் செய்தது இங்கு தான். இங்கு ராஜ அலங்காரத்தில் சண்முகனாக கைகளில் அன்னை தந்த வேல் தாங்கி வெற்றி வீரனாக அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி விழாவும், அதன் ஒரு பகுதியாக நடைபெறும் சூரசம்ஹார நிகழ்வும் உலகப் பிரசித்திபெற்றதாகும்.

3. பழநி:

முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடு திருவாவினன்குடி என்ற பழநி. திண்டுக்கல்லில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பழநி. மலையடிவாரத்தில் சற்று மேல்புறத்தில் அமைந்துள்ளது இத்தலம். திருமகளும், அலைமகளும், காமதேனுவும் பூஜித்த இடம் இது. மலையுச்சியில் உள்ள முருகனின் சிலையானது சித்தர் போகரால் நவபாஷானத்தால் செய்யபட்டது எனக் கூறப்படுகிறது. மலை உச்சியில் வீற்றிருக்கும் பாலதண்டாயுதபாணி ஆண்டி கோலத்தில் பாலகனாக அருள்பாலிக்கிறார்.

4. திருவேரகம் ( சுவாமி மலை ):

முருகப்பெருமான், தன் தந்தையான ஈசனுக்கு உபதேசம் செய்த இடம் இந்த சுவாமிமலை. கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முருகனின் 4-ம் படையான சுவாமிமலை. சுவாமி என்பது இங்கு எல்லாருக்கும் பெரியவராகிய சிவபெருமானையே குறிக்கிறது.

இருப்பினும் மகனுக்கு சீடனாக இருந்து ஈஸ்வரன் உபதேசம் பெற்றதால், குருவாகிய முருகனுக்கு மேல் பகுதியிலும், சிவனுக்கு கீழ் பகுதியிலும் சன்னிதிகள் அமைந்துள்ளது. இங்கு வழிபடும் பக்தர்களுக்கு கல்வி வளம், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

5. திருத்தணி:

சென்னையில் இருந்து சுமார் 86 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது முருகனின் 5-ம் படை வீடான திருத்தணி. திருச்செந்தூரில் சூரபத்மனையும், அவரது சகோதரர்களான சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரை முருகப்பெருமான் வதம் செய்தார். அவர்களின் அழிவு வழி போர்க் கோலத்துடன் ஆவேசமாக இருந்த முருகப்பெருமான், தன்னுடைய கோபம் தணிய வந்து அமர்ந்த தலம் திருத்தணி. செரு என்றால் கோபம் என்றும், தணி என்றால் குறைத்தல் என்றும் பொருள்படும். முன்காலத்தில் செருத்தணி என்றழைக்கப்பட்ட ஊரே, நாளடைவில் திருத்தணி என்றானது.

6. பழமுதிர்சோலை ( அழகர்மலை ) :

முருக பக்தர்களின் மனம் கவரும் வகையில் அமைந்த தலம் ஆறாம் படையான பழமுதிர்சோலை. மதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இத்தலம். இந்த ஆலையத்தில் வள்ளி – தெய்வானையுடன் தம்பதி சமேதராக முருகப்பெருமான் அருள்புரிந்து வருகிறார். தொடக்க காலத்தில் முருகனின் அம்சமாக கருதப்படும் வேலுக்குத் தான் இங்கு வழிபாடு நடைபெற்று வந்தது. தற்போது சிலை ரூபத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கும் முறை உள்ளது.

தமிழ் கடவுளான முருகன் சிறுவனாக வந்து, நாவல் மரத்திலிருந்து நாவல் பழங்களை உதிர்த்து தமிழ் மூதாட்டி அவ்வையிடம் ‘சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா?’ எனக்கேட்டு வாழ்வின் தத்துவத்தை விளக்கிய தலம் இது. பழம் உதிர் சோலை என்பதே பிற்காலத்தில் பழமுதிர்சோலை என்றானது.

Share.
Leave A Reply

Exit mobile version