உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக பௌர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம் ஆகும். மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையை பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர்.
இதில் கார்த்திகை தீப திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பௌர்ணமி அன்றும் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில், வைகாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் தற்போது அறிவித்துள்ளது. பௌர்ணமி வருகிற 30-ம் தேதி மதியம் 12.50 மணிக்கு தொடங்கி மறுநாள் 31-ம் தேதி மதியம் 2.41 மணிக்கு நிறைவடைகிறது.
பௌர்ணமி மட்டுமில்லாமல் 30-ம் தேதி வைகாசி விசாகமும் வருவதால், திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அதனால் மாவட்ட நிர்வாகம் பௌர்ணமி கிரிவலம் செல்ல வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

