ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி ஸ்ரீ அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில், வைகாசி மாத கிருத்திகை திருநாள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நேற்று அதிகாலை முதலே உச்சி கணபதி மற்றும் ஸ்ரீ பாலமுருகன் சுவாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சள் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
மாலை 6 மணியளவில், கோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள பிரம்மாண்டமான அறுகோண தெப்பக்குளத்தில் சிறப்பு நிகழ்வுகள் அரங்கேறின. கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீ பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையில், உற்சவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க மலையிலிருந்து ஊர்வலமாக தெப்பக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டார். பின்னர், குளத்திற்கு சிறப்பு மங்கல தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த தெய்வீக சூழலில், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ என்ற பக்தி முழக்கங்களை எழுப்பினர். தங்கள் கைகளில் அகல் விளக்குகளை ஏந்தி, அந்த ஒளியைக் குளத்திற்கு காட்டி மனமுருகி வழிபாடு செய்தனர்.

