பஞ்சாங்கம் மற்றும் தமிழ் காலண்டரின் அடிப்படையில், 12 மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை போல விசேஷமானதாகும். ஜோதிட ரீதியாகவும், சனி ஜெயந்தி, விரதம் இருக்கக் கூடிய அமாவாசை மற்றும் பித்ரு சாபம் போக்கும் அமாவாசை என்று பல்வேறு சிறப்புகள் உள்ளன. வைகாசி மாத அமாவாசை, சந்திரன் ரிஷப ராசியில் உச்சம் அடையும் மாதத்தில் வருவதால், மிகவும் சிறப்பானதாகும்.
அமாவாசை திதி என்பது மறைந்த நம் முன்னோர்களை (பித்ருக்களை) ஆராதிப்பதற்கான மிக முக்கியமான நாளாகும். முன்னோர்களின் படங்களைச் சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, தூப தீபங்கள் காட்டி மனதார வழிபட வேண்டும். அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளைச் சமைத்து நைவேத்தியமாகப் படைத்து, முதலில் காகத்திற்கு உணவளிக்க வேண்டும். இன்றைய தினம் ஏழைகள் அல்லது தேவைப்படுவோருக்கு (குறைந்தது நான்கு பேருக்காவது) தயிர் சாதம், சாம்பார் சாதம் அல்லது எலுமிச்சை சாதம் போன்ற உணவுகளைத் தானமாக வழங்குவது மிகச் சிறப்பானது. இவ்வாறு செய்வதன் மூலம் பித்ருக்களின் ஆசி முழுமையாகக் கிடைத்து, குடும்பத்தில் உள்ள தரித்திரம் விலகும். மனநிம்மதி, தம்பதியிடையே ஒற்றுமை மற்றும் செல்வ வளம் பெருகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
வைகாசி மாதத்தின் ஆன்மீகச் சிறப்பு: ‘மாதவ மாதம்’ எனச் சிறப்பிக்கப்படும் வைகாசியில், புனித நதிகளில் நீராடி மகா விஷ்ணுவைத் துளசி இலைகளால் அர்ச்சித்து வழிபடுவது பெரும் நற்பலன்களைத் தரும் என விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது. பச்சரிசி, வெல்லம் மற்றும் பாசிப்பருப்பு கலந்த கலவையைப் பசுவிற்கு உணவாக அளித்தால், பசு தெய்வத்தின் அருள் கிடைக்கும். இதனால் ஆயுள் விருத்தியும், குழந்தை பாக்கியமும், வற்றாத செல்வமும் வந்து சேரும்.
அமாவாசை அன்று ஆண்கள் மட்டுமே விரதம் இருந்து தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்ய வேண்டும். கணவன் உயிருடன் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் அமாவாசை அன்று விரதம் இருக்கக் கூடாது என்பது சாஸ்திர விதியாகும். முன்னோர்களுக்கான உணவைச் சமைக்கும் போது, சாஸ்திரத்தில் அனுமதிக்கப்பட்ட காய்கறிகளை மட்டுமே பயன்படுத்திச் சமைப்பது குடும்பத்திற்கு நன்மைகளைத் தரும்.
அமாவாசை நாளில் செய்ய வேண்டியவை: அதிகாலையிலேயே எழுந்து நீராடி, சிவபெருமான் மற்றும் மகா விஷ்ணுவை மனமுருகி வழிபட வேண்டும். அன்றைய தினம் அரச மரத்தின் அடியில் கடுகு எண்ணெயில் தீபம் ஏற்றுவது நன்மைகளைத் தரும். சனி பகவான் சன்னதியில் கருப்பு உளுந்து, இரும்பு, நீல நிற மலர்கள் மற்றும் கடுகு எண்ணெய் தானம் அளித்து, சனி பகவானின் மந்திரத்தை 101 முறை உச்சரித்து வழிபடலாம். ஒரு ஸ்பூன் அளவு பாலைப் பூமியில் ஊற்றுவது, வாழ்க்கையில் ஏற்படும் தடைகளைத் தகர்க்க உதவும் என நம்பப்படுகிறது. பசுக்களுக்குப் பழங்கள் கொடுப்பதும், எள் கலந்த நீரை நீர்நிலைகளில் விடுவதும் குடும்பத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் நிலைநிறுத்தும்.
அமாவாசை நாளில் தவிர்க்க வேண்டியவை: எந்தவொரு புதிய சுப நிகழ்ச்சிகளையும் அன்றைய தினம் தொடங்கக் கூடாது. வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முக்கிய முடிவுகளை எடுப்பதையோ அல்லது நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்வதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள், மீன், முட்டை மற்றும் வெங்காயம், பூண்டு போன்றவற்றை உணவில் சேர்க்கக் கூடாது. இறை வழிபாட்டிற்காகத் துளசி இலைகளைப் பறிக்கக் கூடாது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இன்றி, யாரிடமும் கடுமையான சொற்களைப் பயன்படுத்தாமல் அமைதி காக்க வேண்டும்.

