சென்னைக்கு அடுத்தப்படியாக ஐடி வேலைவாய்ப்பில் வளர்ந்து வரும் மாவட்டமாக இருந்து வருகிறது கோவை. இங்கு பல பாரம்பரியமான, வரலாறு மிக்க கோயில்களும் உள்ளது. அப்படியான கோவையின் அடையாளமாய் திகழும் பேரூர் பட்டீஸ்வரர் கோயில், நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பல்வேறு அதிசயங்களை தனக்குள் வைத்திருக்கிறது இந்தக் கோயில். அவற்றில் சில..
* பிறவாப்புளி :
பட்டீஸ்வரர் கோயில் வளாகத்தில் புளியமரம் ஒன்று உள்ளது. இந்தப் புளிய மரத்தின் விதைகளை எங்குப் போட்டாலும் முளைக்காதாம் அதேப் போல இம்மரத்தின் இலைகள் இரவில் தூங்குவதில்லையாம். இலைகள் மடிவதும் இல்லாததால், இதனை பிறவா நிலை தடும் தலம் என்பதை குறிக்கிறது. ஆகையால் இந்த மரத்திற்கு பிறவாப்புளி என்ற பெயர் வந்தது.
* புழு வராத சாணம் :
பொதுவாக மாட்டு சாணத்தில் சில மணி நேரத்தில் புழுக்கள் வரும். ஆனால் இக்கோயிலில், காமதேனு வாழ்ந்த இடம் என்பதால், இங்கு வளர்க்கும் மாடுகளின் சாணத்தில் எத்தனை நாட்கள் ஆனாலும் புழுக்கள் வருவதில்லை எனக் கூறப்படுகிறது.
* மறு பிறப்பு இல்லை :
பேரூரில் யார் இறந்தாலும், அவர்களின் வலது காது மேற்புரம் இருக்குமாறு வைப்பர். ஏனென்றால் இறந்தவர்களின் வலது செவியில் சிவபெருமானே பஞ்சாட்சர மந்திரத்தைக் கூறி, அவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் செய்கிறாராம்.
* எலும்பு கல்லாக மாறுதல் :
காசுக்கு நிகராகக் கருதப்படும் 7 தலங்களில் பேரூரும் ஒன்று. இறந்தவர்களின் எலும்புகளை இங்குள்ள நொய்யல் ஆற்றில் கரைத்தால், அவை சில காலத்திற்குப் பின் வெள்ளை கற்களாக மாறும் அதிசய நிகழ்வு நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். எனவே இது முக்தித் தலமாக விளங்குகிறது.
* இறவா பனை :
இங்குள்ள பனைமரம் ’இறவா பனை’ என அழைக்கப்படுகிறது. கோயில் அருகேயுள்ள மிக உயரமான இந்த பனைமரம் நெடுங்காலமாக உயிர்த்து வாழ்கிறது. இது இறைவாத் தன்மையைக் குறிக்கிறது. இந்தப் பகுதியில் வாழும் மக்கள், மறுப்பிறப்பின்றி இறவாத புகழ் உடம்பு பெறுவர் என்பது நம்பிக்கை. எனவே இத்தலம் முக்தி தலமாக போறப்படுகிறது.

