முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாகப் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு நடைபெற்ற தங்கத்தேர் பவனி பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
ஆடி கிருத்திகை தினமான இன்று, அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்களும் மகா தீபாராதனைகளும் விமரிசையாக நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மாலையில், ஜெயந்திநாதர் மற்றும் வள்ளி-தெய்வானை திருமேனிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னர், சாமி மலர்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் எழுந்தருளினார்.
கோயில் வளாகத்திலுள்ள பிரகாரத்தைச் சுற்றியமைந்த வீதிகளில் தங்கத்தேர் பவனி வந்தபோது, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷமிட்டுக் கொண்டே வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

