“தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!”…
“மண்ணுலகின் கைலாயம்” என்றும், “ஆதி சிதம்பரம்” என்றும் போற்றப்படும் திருக்கோயில் உத்தரகோசமங்கை ஸ்ரீமங்களநாத சுவாமி திருக்கோயில்.
சிதம்பரத்தைப் பற்றி நாம் அறிவோம், ஆனால் அந்தச் சிதம்பரத்திற்கே முந்திய ஒரு தலம் உண்டு என்றால் அதுதான் உத்தரகோசமங்கை. “மண் முந்துதோ, மங்கை முந்துதோ?” என்பது உத்தரகோசமங்கைப் மக்களின் வாழ்நாள் பழமொழி. அதாவது, இந்த மண் உருவாவதற்கு முன்பே உருவானது இந்த மங்கைத் தலம் என்பது இதன் தொன்மைக்குச் சான்று.
இந்த ஊரின் பெயரிலேயே ஒரு பெரிய ரகசியம் ஒளிந்திருக்கிறது.
உத்தர என்றால் – பதில் அல்லது உபதேசம். கோசம் என்றால் – ரகசியம் (வேத ரகசியங்கள்). மங்கை என்றால் – பார்வதி தேவி. பார்வதி தேவிக்கு, சிவபெருமான் வேதங்களின் நுட்பமான ரகசியங்களை உபதேசித்தத் தலம் என்பதால் இது ‘உத்தர-கோச-மங்கை’ என்று அழைக்கப்படுகிறது.
இந்தத் தலத்தின் வரலாறு திரேதா யுகத்தோடு தொடர்புடையது. இலங்கையை ஆண்ட ராவணனின் மனைவி மண்டோதரி, ஒரு சிறந்த சிவபக்தை. அவர் “இறைவனே நேரில் வந்து எனக்குக் காட்சி தர வேண்டும்” என இத்தலத்தில் தவம் இருந்தார்.
அவருடைய பக்திக்காக சிவபெருமான் ஒரு குழந்தையாக அவர் மடியில் வந்து அமர்ந்தார். இதைக் கண்ட ராவணன், அக்குழந்தையைச் சிவபெருமான் என அறியாமல் தொடுவதற்கு முயல்கிறார். அப்போது இறைவன் ஒரு அக்னி பிழம்பாக மாற, அந்த அக்னியில் இத்தலத்தின் தீர்த்தமான ‘அக்னி தீர்த்தம்’ உருவானது என்பது வரலாறு.
இந்தக் கோயிலின் மிகப்பெரிய அதிசயம் அங்குள்ள மரகத நடராஜர் திருமேனி. ஆறடி உயரமுள்ள இந்தச் சிலை, முழுமையாக ஒரே ஒரு பச்சை மரகதக் கல்லால் ஆனது. மரகதம் என்பது மிகவும் மென்மையானது. ஒலியின் அதிர்வைக் கூடத் தாங்க முடியாதது. எனவே, சிலையைப் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டே இருக்கும்.
ஆண்டுக்கு ஒருமுறை, ஆருத்ரா தரிசனம் அன்று மட்டும் அந்தச் சந்தனம் களையப்படும். அன்று அந்தப் பச்சை மரகத மேனியைக் காணக் கண் கோடி வேண்டும்!. அந்த ஒரு நாளைத் தவிர மற்ற 364 நாட்களும் சந்தனக் காப்பிலேயே இறைவன் அருள் பாலிக்கிறார்.
சிவபெருமான் மேல் மாறாத பக்தி கொண்ட மாணிக்கவாசகர், இத்தலத்தில் தான் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். அவர் பாடிய திருவாசகத்தில் “உத்தரகோசமங்கைக்கு அரசே!” என்று உருகிப் பாடியுள்ளார்.
பொதுவாகச் சிவபெருமானுக்குத் தாழம்பூ சூட்டமாட்டார்கள். ஏனென்றால் பிரம்மனுக்கு சாட்சியாக தாழம்பூ பொய் சொன்னதால், பூஜைக்கு பயன்படாமல் போவால் என தாழம்பூவுக்கு சிவபெருமான் சாபம் தந்ததாக வரலாறு. ஆனால், சாப விமோசனம் பெற்ற தலம் என்பதால், இங்கு மட்டும் சிவனுக்குத் தாழம்பூ சூட்டப்படுவது ஒரு விசேஷம்.
இக்கோயிலின் தல விருட்சமான இலந்தை மரம் மிக மிகத் தொன்மையானது. இன்றும் அது கனி தந்து கொண்டிருப்பது இயற்கையின் அதிசயம்.
கைலாயத்திற்குச் செல்ல முடியாதவர்கள், உத்தரகோசமங்கைக்குச் சென்றால் அந்தப் பலனை அடையலாம் என்பது ஐதீகம். கல்லும் மண்ணும் கூடச் சிவமயமாகத் திகழும் இந்தத் தலம், தமிழர்களின் கட்டிடக்கலைக்கும், ஆன்மீகத் தேடலுக்கும் ஒரு மிகப்பெரிய பொக்கிஷம்.
“ஆடும் கூத்தன் ஆதி சிதம்பரம்” எனப் போற்றப்படும் இந்த மண்ணிற்கு ஒருமுறை சென்று அந்த மரகத மேனியனை வணங்குவது நம் வாழ்வின் பெரும் பேறு.

