தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பெரும்பாலான கோயில்களில் மதிய நேரம் நடை சாற்றப்படுவது வழக்கம். ஆனால் காலையில் நடை அடைக்கப்படாத கோயில் ஆதிதிருவரங்கம் கோயில்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஆதி திருவரங்கம் கோயில். இங்குள்ள மூலவர் ஸ்ரீரங்கநாதர் 29 அடி நீளத்தில் சயன கோலத்தில் வீற்றிருக்கிறார். பகலில் மூடப்படாத பழமையான இத்தலம் 10 திவ்ய தேசங்களை விடவும் முற்பட்டது என நம்பப்படுகிறது.
வரலாறு :
அசுரகுல வம்சத்தில் தோன்றி ஆட்சிபுரிந்து வந்த சோமுகன் என்னும் அசுரன் மிகவும் கடுமையான தவங்களை செய்து பல வரங்களையும் அழியாத ஆயுளையும் பெற்றான். அசுர குலத்துக்கே உரிய ஆவணமும், அரக்கத்தனமும் அவனுக்கு இருந்தது. பூவுலகையும், தேவலோகங்களையும் தனது ஆட்சிக்குள் கொண்டு வர வேண்டும். முனிவர்களும், தேவர்களும் தனக்கு சேவை செய்ய வேண்டும் என்று எண்ணினான். அவ்வாறே பூவுலகம், தேவலோகம் எல்லாவற்றையும் வென்று முனிவர்களையும் தேவர்களையும் தனது அடிமைகளாக்கி தனக்கு சேவை செய்யுமாறு பணித்தான்.
மும்மூர்த்திகளில் பிரம்மாவை சிறைபிடித்து வேத சாஸ்திரங்களை அவரிடமிருந்து கவர்ந்து சென்று விட்டான். பிரம்மாவும், தேவர்களும், முனிவர்களும் திருப்பாற்கடல் சென்று ஸ்ரீமன் நாராயணனை வணங்கி சோமுகனை வதம் செய்து தங்களை காத்தருளுமாறு வேண்டினார். நாராயணனும் சோமுகனை வதம் செய்ய சென்றார். இருவருக்கும் மிகப்பெரிய அளவில் போர் நடந்தது. சோமுகன் தனது எல்லா மாயாஜாலங்களையும் காட்டி போர் புரிந்து சோர்ந்து விட்டான். இனி இருந்தால் நாராயணன் அழித்து விடுவான் என எண்ணி கடலுக்கு அடியில் சென்று பதுங்கி விட்டான்.
ஸ்ரீமன் நாராயணன் அழியா வரம் பெற்ற சோமுகனை மத்ஸ்ய அவதாரமெடுத்து கடலுக்கு அடியில் சென்று வதம் செய்து வேத சாஸ்திரங்களை மீட்டு வந்தார். மீட்டு வந்த வேத சாஸ்திரங்களை உத்தரங்கம் எனும் இந்த இடத்தில் மீண்டும் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தார். தேவர்களும், முனிவர்களும் மனம் மகிழ்ந்து ஸ்ரீமன் நாராயணனை வணங்கியதாக கூறப்படுகிறது.
திருவிழாக்கள் :
புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகள், பௌர்ணமி, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
சிறப்புகள் :
* இக்கோயிலில் பெருமாள் ஐந்து தலை ஆதிசேஷன் மீது போக சயன கோலத்தில் (மகிழ்ச்சியான நிலையில்) காட்சியளிக்கிறார். இவரது திருமேனி சுமார் 15 அடி உயரம் கொண்டது. இது ஸ்ரீரங்கத்தை விட பெரியது.
* பெருமாளின் திருமுகம் ஸ்ரீதேவியின் மடியிலும், ஒரு திருப்பாதம் பூமாதேவியின் கரத்திலும், மற்றொரு திருப்பாதம் ஆதிசேஷனின் வால் பகுதியிலும் இருப்பது போன்ற அமைப்பு மிகவும் பிரசித்தம்.
பரிகாரங்கள் :
வேலை, திருமணம், புத்திர பாக்கியத்திற்காக இக்கோயிலில் பரிகாரங்கள் செய்யப்படுகிறது.

