தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த கோயில்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலும் ஒன்று. இங்கு நாள்தோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர்.
மேலும் பவுர்ணமி மற்றும் விழா நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த கோயிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. அதில் கார்த்திக்கை தீபத் திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா போன்றவை முக்கியமான விழாக்களாகும்.
அவ்வகையில் அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் கோயிலில் விநாயகர் உற்சவம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
அதனைத்தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தின் முன்பு பராசக்தி அம்மன் பக்தர்கள் மத்தியில் எழுந்தருளினார். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கல வாத்தியங்கள் முழங்க சுமார் 6.30 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெறும். அதன்படி நேற்று விநாயகர், பராசக்தி அம்மன் வீதிஉலா நடை பெற்றது.
வருகிற 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை விழா நடக்கிறது. 14-ந் தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலையில் வளைகாப்பு உற்சவமும், பின்னர் பராசக்தி அம்மன் வீதிஉலாவும் நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பரணிதரன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

