திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, இன்று மகா கும்பாபிஷேக விழா மிக விமரிசையாக நடைபெற்றது.
இந்த மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஆலய வளாகத்தில் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவற்றுடன் முதல்கால யாக பூஜை, கோ பூஜை மற்றும் அடுத்தடுத்த கால யாக பூஜைகள் பக்தி சிரத்தையுடன் நடத்தப்பட்டன. இன்று காலை நான்காம் கால யாக பூஜை நிறைவடைந்து மகா பூர்ணாஹுதி மற்றும் சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, செல்வ விநாயகர் ஆலயத்தின் கோபுர கலசத்திற்குப் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை முறைப்படி நடத்தினர்.
கோபுர கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, மூலவர் செல்வ விநாயகருக்கும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் மீது கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது.
இந்த ஆன்மீக பெருவிழாவில் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

