ஈரோடு மாவட்டம் கோபி வண்டிபேட்டையில் அமைந்துள்ளது 75 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஏரி மாரியம்மன் கோயில். இங்கு விநாயகர், துர்க்கை, கருப்பராயன், கன்னிமார் ஆகிய தெய்வங்களுக்கு தனித் தனி பிரகாரம் உள்ளது. இந்தக் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. கடந்த 8-ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் குடமுழுகு விழா தொடங்கியது. தொடர்ந்து 13-ம் தேதி முளைப்பாலிகை இடுதல், 15-ம் தேதி விநாயகர் பூஜை, நவகிரஹ யாகம் மற்றும் கணபதி யாகமும் பின்னர் பவானி கூடுதுறை ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது.
அதன்பின் 17-ம் தேதி முளைப்பாலிக கோயிலுக்கு கொண்டு வருதல், வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், முதல்கால யாக பூஜை, 18-ம் தேதி பூத சுத்தி, பாவனாபிஷேகம், மூர்த்தி கும்ப பூஜை, இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூல மந்திர ஹோமமும், மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.
19-ம் தேதி காலையில் விநாயகர் பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல், கோபுர கலசம் வைத்தல், நான்காம் கால யாக பூஜை, மாலையில் தாமரை மலர்களால் சஹஸ்ரநாம அர்ச்சனையை தொடர்ந்து 5-ம் கால யாக பூஜை மற்றும் ஸ்ரீ ஏரி மாரியம்மனுக்கு ரஜபந்தனம் சாற்றுதல் நடைபெற்றது. இன்று காலை நாடி சந்தனம், சக்திகளை திருமேனியில் சேர்த்தலை தொடர்ந்து புனித நீர் உள்ள கலசங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோயிலை வலம் வந்து ஸ்ரீ ஏரி மாரியம்மன், விநாயகர், துர்க்கை, கருப்பராயன், கன்னிமார் கோயில் கோபுரங்களை அடைந்தனர்.
பின்னர் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் கோபி, வண்டிபேட்டை, மார்க்கெட், கச்சேரிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

