பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தில்ஸ்ரீ விநாயகர் பூதேவி ஸ்ரீதேவி ஸ்ரீ வரதராஜ பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் கூடிய பழமை வாய்ந்த கம்பப் பெருமாள் கோயில் உள்ளது, இக்கோவிலை புனரமைக்கும் பணி கடந்தாண்டு தொடங்கியது. இதில் ஐதீக முறைப்படி சுதை வேலையுடன் கூடிய பெருமாள் கோவில் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. மேலும் நுழைவாயில் அமைத்து வர்ணம் பூசி கோவில் பணிகள் முடிவடைந்த நிலையில் அதற்கான மகா குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.
இதில் நேற்று மாலை கணபதி ஹோமம் வாஸ்து சாந்தியுடன் பூஜை தொடங்கி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை யாகசாலையில் யாகம் வளர்த்து பூர்ணாகூதி முடிந்து கடங்கள் புறப்பட்டு கோவில் கோபுரத்திற்கு கொண்டுவரப்பட்டன. அங்கு கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கம்பப் பெருமாள் விநாயகர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது இதில் பெரம்பலூர் நகர், கோனேரி பாளையம், எளம்பலூர், தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
