அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், ஞாயிறு வார விடுமுறை தினமான இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகம் முழுவதும் மக்கள் கடலாகக் காட்சியளிக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற இக்கோவிலுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்து காணப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் பழனி மலையடிவாரத்தில் உள்ள கிரிவீதி, சன்னதி வீதி மற்றும் பாதவிநாயகர் கோவில் வளாகம் ஆகிய பகுதிகள் பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.
ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் (Winche) நிலையங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். பொதுத் தரிசனம் மற்றும் கட்டணத் தரிசன வழிகளிலும் கூட்டம் அதிகமாக உள்ளதால், பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பொறுமையுடன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் மலைக்கோவிலுக்குச் செல்ல தற்காலிகமாக ஒருவழிப்பாதை திறக்கப்பட்டுப் பக்தர்கள் முறைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கக் காவல் துறையினரும், கோவில் நிர்வாகத்தினரும் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

