பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், தனது வருவாய் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி போன்ற திருவிழாக் காலங்களிலும், கார்த்திகை, மார்கழி மாதங்களிலும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டுகிறது. இவர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில், ரோப் கார், விரைவுத் தரிசன டிக்கெட்டுகள், காலபூஜை, பஞ்சாமிர்தம் மற்றும் தங்கரத உலா போன்ற சேவைகளை கோயில் நிர்வாகம் வழங்கி வருகிறது. இவை தவிர, பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் ஆன்லைன் மற்றும் நேரடி கவுண்ட்டர்கள் மூலம் வசூலிக்கப்படுகின்றன.
இந்து சமய அறநிலையத்துறையின் ‘பசலி ஆண்டு’ (ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை) கணக்கீட்டின்படி, கடந்த 1435-ஆம் பசலி ஆண்டில் (01 ஜூலை 2025 முதல் 30 ஜூன் 2026 வரை) பழனி மலைக்கோயிலின் மொத்த வருவாய் ரூ.103,24,13,525 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் முதன்முறையாக 100 கோடி ரூபாயைத் தாண்டி கோயில் நிர்வாகம் மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் கோயிலின் வருவாய் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளது என்பதை கோயில் நிர்வாகத்தின் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதன்படி, 2020-ல் ரூ.15.28 கோடியாக இருந்த வருவாய், 2021-ல் ரூ.41.97 கோடியாகவும், 2022-ல் ரூ.80.62 கோடியாகவும், 2023-ல் ரூ.86.06 கோடியாகவும், 2024-ல் ரூ.97.32 கோடியாகவும் படிப்படியாக உயர்ந்தது.
இறுதியாக தற்போது 2026-ஆம் ஆண்டில் (1435 பசலி) ரூ.103.24 கோடியை எட்டியுள்ளது. பக்தர்களின் வருகை பல மடங்கு அதிகரித்திருப்பதே இந்த வருவாய் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். வசூலிக்கப்படும் இந்தத் தொகை அனைத்தும் கோயிலின் உள்கட்டமைப்பு வசதிகள், பக்தர்களுக்கான அன்னதானம் மற்றும் தூய்மைப் பணிகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

