மதுரை என்றாலே மக்களுக்கு நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் மற்றும் கள்ளழகர் கோயில். இந்த கோயில்களை தாண்டி சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஒரு வைணவத் தலமும் மதுரையில் பிரபலமானதே.

அதுதான் மதுரை மேலமாசி வீதி, தெற்கு மாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ள மதனகோபால சுவாமி திருக்கோயில். இந்த தலத்தின் வரலாறு பற்றி விரிவாகப் பார்க்கலாம்..!

வரலாறு : மதுரையில் சிவபெருமான் மீனாட்சி அம்மனை திருமணம் செய்துவிட்டு, சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து தீவிர சிவபூஜை செய்தார். பூஜை செய்யும்போது, சிவபெருமான் தியானத்தில் ஆழ்ந்தார். இதனால் சிவபெருமான் உடலில் வெப்பம் அதிகமாகி, அது அக்னி ஜூவாலையாக மாறி உலகை பாதித்தது.

இதனால் அச்சம் அடைந்த தேவர்கள், பிரம்மதேவரின் தலைமையில் மகாவிஷ்ணுவிடம் சென்று உலகை காக்கும்படி வேண்டி நின்றனர். சிவபெருமானின் தியானத்தை கலைத்தால் மட்டுமே, அவரது உடலில் ஏற்படும் வெப்பம் குறைந்து உலகை காக்க முடியும் என்பதை மகாவிஷ்ணு அறிந்தார். உடனே, தன் புல்லாங்குழலை எடுத்து இசைக்க ஆரம்பித்தார்.

புல்லாங்குழல் இசையானது சிவபெருமானின் காதில் கேட்டது. அதில் மயங்கிய சிவபெருமான் தியானம் கலைந்து கண் விழித்தார். இதனால் வெப்பம் தணிந்து உலகம் காக்கப்பட்டது. இதையடுத்து மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், மகாவிஷ்ணுவிடம் “தாங்கள், மதனகோபாலன் என்ற திருநாமத்துடன் எப்போதும் என் அருகிலேயே இருந்து புல்லாங்குழல் இசைத்து என்னை மகிழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.

அதன்பேரில், மதுரை மேல மாசி வீதியில் இம்மையிலும் நன்மை தருவார் என்ற சிவாலயத்திற்கு அருகில் மதனகோபால் சுவாமி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவர் புல்லாங்குழல் இசைத்துக் கொண்டு சிவபெருமானை மகிழ்வித்தும், நம்மை காத்தும் அருள்கிறார்.

ஒரு முறை ஆண்டாள் திருவரங்கம் செல்லும் முன்பு, பெரியாழ்வாருடன் பல்லக்கில் இங்கு வந்து மதன கோபால சுவாமியை தரிசனம் செய்ததாகவும், அதன் பின்புதான் ஆண்டாள் அரங்கப் பெருமாளின் திருமேனியில் ஐக்கியமானதாகவும் கூறப்படுகிறது.

இக்கோயிலின் அமைப்பு : ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள இக்கோயிலில் நுழைந்தவுடன் இடதுபுறத்தில் அரச மரத்தடியில் விநாயகர் உள்ளார். கருவறையில் மூலவர் அஷ்டாங்க விமானத்தின் கீழ், இரண்டு கைகளிலும் புல்லாங்குழல் வைத்துக் கொண்டு, இடது காலை ஊன்றி, வலது காலை சற்று மாற்றி விஸ்வரூப கண்ணனாக காட்சி தருகிறார். இவரது அருகில் சத்யபாமா, ருக்மணி தேவியர் உள்ளனர்.

வழக்கம் போல கோயிலை சுற்றிலும் ராமபிரான், மதுரவல்லி தாயார், ஆண்டாள் ஆகியோர் தனித் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஹரி ஹர சர்ப்ப ராஜா, பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் தனி தனி சன்னதிகள் இக்கோயிலில் உண்டு.

வழிபாடு : இங்கு வெள்ளிக் கிழமை தோறும் ஹரி ஹர சர்ப்ப ராஜாவுக்கு ராகு கால பூஜை நடைபெறுகிறது. ராகு – கேது தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம் உள்ளவர்கள் இந்த பூஜை செய்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இசைத் துறையில் சிறந்து விளங்க விரும்புபவர்கள், இத்தல இறைவனை வழிபடுவது சிறப்பாகும். இக்கோவிலில் அறுபதாம் கல்யாணமும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, மார்கழி பாவ நோன்பு போன்ற விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.

வழி : மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும், பெரிய பேருந்து நிலையத்திற்கு அருகேயும் அமைந்துள்ளது இக்கோயில்.

Share.
Leave A Reply

Exit mobile version