உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், ஆடி முளைக்கொட்டு திருவிழா இன்று (ஜூலை 16) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோயிலில் உள்ள சுவாமி சன்னதி கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க முறைப்படி கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும், தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டியும் முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். இந்தநிலையில், ஆடி முளைக்கொட்டு விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம் , நவராத்திரி விழா, மார்கழி எண்ணெய்க் காப்பு ஆகியவை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு மட்டும் உரிய சிறப்பாக கொண்டாடப்படும்.
அந்த வகையில், இன்று தொடங்கிய இந்த ஆடி முளைக்கொட்டு திருவிழா தொடர்ந்து பத்து நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறவுள்ளது. திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் மீனாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்வாக, அம்மன் சன்னதி முன்பாக நவதானியங்கள் தூவப்பட்ட முளைப்பாரிகள் வளர்க்கப்பட்டு, பெண்கள் கூடி பாரம்பரிய முறைப்படி கும்மியடித்து முளைக்கொட்டு ஆட்டம் ஆடுவர்.
வரும் 22ம் தேதி மாலை அம்மன் ஆடி வீதி உலா நிறைவடைந்ததும், உற்சவர் சன்னதியில் மாலை மாற்றும் பூஜைகள் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீனாட்சி அம்மனை தரிசிக்கக் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளைக் கோயில் நிர்வாகமும், காவல்துறையும் விரிவாகச் செய்துள்ளனர்.

