மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 11-ம் நாளில் மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மதுரையை அடுத்த அழகர் கோயில் மற்றும் மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரை விழாக்களை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
அந்த வகையில் இந்தாண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடை அம்மனுடன் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மீனாட்சி அம்மன் மதுரை மாநகரின் ஆட்சி பொறுப்பேற்கும் விதமாக கடந்த 26-ம் தேதி பட்டாபிஷேகம் சூட்டப்பட்டது. தொடர்ந்து சிவபெருமானை அம்மன் போருக்கு அழைத்த நிகழ்வான திக்கு விஜயம் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது.
விழாவின் 11-ம் நாளில் மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசுவரர், பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணியளவில் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இசை வாத்தியங்கள் முழங்கியப்படி, லட்சக்கணக்கான பக்தர்களின் அரகாரா முழக்கம் விண்ணைப் பிளக்க திருத்தேரோட்டம் நடைபெற்றது.

