கோயில் நகரமாகப் போற்றப்படும் காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி திருக்கோயிலில், ஆனி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வெள்ளித்தேர் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், செண்டை மேளதாளங்கள் முழங்க, முருகப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளினார்.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில், வெள்ளை நிற பட்டாடை அணிந்து, வைரம் மற்றும் வைடூரிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது திரண்டிருந்த பக்தர்கள் “அரோகரா… அரோகரா…” என பக்தி கோஷங்கள் எழுப்பியவாறு வெள்ளித்தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். கோயில் உட்பிரகாரத்தை வலம் வந்த வெள்ளித்தேரில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version