ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இன்று ஆனி மாத வளர்பிறை சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.
மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷத்தன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று விதியை வெல்லும் ஆனி மாத வளர்பிறை சனி மகா பிரதோஷத்தை ஒட்டி நந்தி பகவானுக்கு பல்வேறு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. சனி பிரதோஷ வழிபாட்டிற்கு வந்திருந்த பக்தர்கள் வரிசையில் அமர்ந்து நந்தியம்பெருமானை வழிப்பட்டனர்.
மேலும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பூக்கள், அருகம்புல், இவற்றை மாலையாக்கி நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர் நந்தி வாகனத்தில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

