திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக இங்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருவதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இலவச தரிசனத்தில் 20 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். ரூ.300 சிறப்பு தரிசனத்திலும் குறைந்தது 4 மணி நேரமாவது காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் மூத்த குடிமக்கள் கோயிலில் அவதியடைந்து வருகின்றனர். நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால் உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

இந்த நிலையில் முதியோர்கள் சாமி தரிசனம் செய்ய சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் 30 நிமிடங்களில் ஏழுமலையான தரிசிக்க இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தரிசனம் செய்ய, 65 வயதிற்கு மேலான பக்தர்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும் வயதுச் சான்றை கவுண்டர் எஸ்1-ல் காட்ட வேண்டும். பின்னர் கோயிலின் வலது சுவரையொட்டி பாலத்தின் கீழுள்ள மண்டபத்தின் வழியாக செல்லலாம். இந்த வழியில் படிக்கட்டுகள் எதுவும் கிடையாது என்பதால், எளிதாக நடந்து செல்லலாம். தரிசன வரிசைக்கு சென்றவுடன் 30 நிமிடங்களில் தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வந்துவிடலாம்.

தரிசனத்திற்கு பிறகு முதியோர் அனைவருக்கும் இலவசமாக சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் வழங்கப்படும். மேலும் பேட்டரி கார்கள் மூலம் வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து கவுண்டருக்கும், அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் செல்ல வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version