ஆனி பிரம்மோற்சவ விழாவின் 6வது நாள் உற்சவத்தை முன்னிட்டு, அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
உலகப் புகழ்பெற்ற பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆனி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அண்ணாமலையார் கோயிலில் இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா, கடந்த ஜூலை 8-ம் தேதி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள தங்கக் கொடிமரத்தில் முறைப்படி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில், தினந்தோறும் காலையும் மாலையும் அம்பாளுடன் சந்திரசேகரர் கோவிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவது வழக்கமாகும்.
பிரம்மோற்சவத்தின் 6வது நாள், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கும் விநாயகப் பெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சுவாமிக்குத் திருவாபரணங்கள் மற்றும் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
மகா தீபாராதனை முடிந்தவுடன், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகர் மற்றும் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் ஆகியோர் திருக்கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்தனர். மாட வீதிகளின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து, பக்திப் பெருக்குடன் சாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகரமே தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது.
