தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலய ஆண்டு பெருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியான பூண்டி அன்னையின் ஆடம்பர தேர்பவனி வியாழக்கிழமை (மே. 14) இரவு நடைபெற்றது. பூண்டிமாதா பேராலயத்தில் நிகழாண்டு பெருவிழா 6ஆம் தேதி புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நவநாட்கள் திருப்பலி பூசைகளை பல்வேறு அருட்தந்தையர் நிறைவேற்றினர்.
வியாழக்கிழமை பூண்டி மாதா பேராலயத்தின் முன்னாள் பங்கு தந்தையர் வி.எஸ்.லூர்துசேவியர், இராயப்பர் ஆகியோரின் நினைவுத் திருப்பலி பூசைகள் நிறைவேற்றப்பட்டது. மாலை 6.00 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட மேதகு ஆயர் அ.ஜீவானந்தம் தலைமை ஏற்று கூட்டுப்பாடல் திருப்பலிபூசை நடத்தி, மறையுரையாற்றி, ஆசி வழங்கி, இரவு 8.30 மணிக்கு மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாதாவின் அலங்கார, ஆடம்பர தேர்பவனியை புனிதப்படுத்தி துவக்கிவைத்தார்.
குடியிருந்த மக்கள் பூண்டி மாதாவே வாழ்க, அன்னையே வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினர். தேர் பவனியில் கும்பகோணம் மறைமாவட்டமுதன்மை குரு எம்.பிலோமின்தாஸ், மறைமாவட்ட பொருளாளர் ஜெ.அந்தோனிஜோசப், மைக்கேல்பட்டி மறை வட்ட முதன்மை குரு எஸ்.இன்னசென்ட், பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்கு தந்தையுமான பி.ஜெ.சாம்சன், துணை அதிபர் ஜெ.ரூபன்அந்தோணிராஜ், பூண்டிமாதா தியான மைய இயக்குநர் எஸ். ஆல்பர்ட் சேவியர், உதவித் தந்தைகள் எஸ்.அருள்லாரன்ஸ், எம்.செல்வகுமார், ஆன்மீக தந்தை பி.ஜோஸப், சுற்றுவட்ட பங்கு குருமார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து வாண வேடிக்கைகள் நடைபெற்றன.

