புதுச்சேரி மாநிலம் உப்பளம் தொகுதிக்குட்பட்ட திப்பராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீதேவி நாகவல்லி மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 17-ம் தேதி சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. அன்று கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு வேத சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில், 18-ம் தேதி வியாழக்கிழமை காலை பூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் யாத்ராதானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, காலை 10 மணி முதல் 11.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் மகா கும்பாபிஷேக குடமுழுக்கு விழா நடைபெற்றது.

அப்போது ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பால முருகர் மற்றும் ஸ்ரீதேவி நாகவல்லி மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் சிவக்குமார், கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

