விழுப்புரம் மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் அருள்மிகு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் பக்திப் பெருக்கோடு வெகு விமரிசையாக நிறைவடைந்தது.
வைகாசி அமாவாசை தினத்தையொட்டி அதிகாலை முதலே மேல்மலையனூர் கோவில் வளாகம் ஆன்மீக அதிர்வுகளால் நிறைந்திருந்தது. நடை திறக்கப்பட்டவுடன் மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.
அபிஷேகத்தைத் தொடர்ந்து வண்ண வண்ண மலர்களாலும், ஜொலிக்கும் தங்கக் கவசத்தாலும் அம்மன் பேரெழிலோடு காட்சியளித்தார். சர்க்கரைப் பொங்கல், சுண்டல் மற்றும் பலவகை பழங்கள் படைக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
அதிகாலை முதலே நீண்ட நெடிய வரிசையில் பொறுமையோடு காத்திருந்த பக்தர்கள் அம்மனின் திவ்ய தரிசனத்தைக் கண்டு உருகினர். உற்சவர் அங்காளம்மன் ஆதிபராசக்தி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள் பாலித்தார். நாள் முழுவதும் விரதமிருந்து இரவில் நடக்கும் ஊஞ்சல் உற்சவத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அலைகடலெனத் திரண்டிருந்தனர்.
இரவு 11 மணியளவில் பூசாரிகளின் பாரம்பரிய முறைப்படி உற்சவர் அங்காளம்மன் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளினார். அப்போது பூசாரிகள் தாலாட்டுப் பாடி தீபாராதனை காட்ட , திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கைகளில் நெய் தீபம் ஏந்தி ஓம் சக்தி அங்காளம்மா என எழுப்பிய பக்தி முழக்கம் ஒட்டுமொத்த மேல்மலையனூரையும் விண்ணதிரச் செய்தது.
பக்தர்களின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. பாதுகாப்புப் பணியில் 600 க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நெரிசலைக் கட்டுப்படுத்த முறையான தடுப்பணைகள் அமைக்கப்பட்டிருந்தன.
சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்குத் தடையின்றி குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்பட்டன. கோவில் உதவி ஆணையர், அறங்காவலர் குழுவினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

