வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர தினமான வைகாசி விசாகத் திருவிழா, வரும் 30ம் தேதி அனைத்து முருகன் ஆலயங்களிலும் மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு வரும் 21ம் தேதி முதல் துவங்கும் புகழ்பெற்ற வசந்தத் திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
திருவிழா நாட்களில் தினமும் பகல் பொழுதில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி கோயில் சண்முக விலாச மண்டபத்திற்கு செல்வார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்று, மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் நகர் முழுவதும் களைகட்டத் தொடங்கி உள்ளது.
தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மற்ற கால பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன. கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி விட்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.

