ஜாதகத்தில் 10-ம் வீடு (கர்ம ஸ்தானம்), அதன் அதிபதி மற்றும் 10-ம் பாவகத்துடன் தொடர்புடைய கிரகங்களே ஒருவரின் தொழில் அமைப்பின் சாதகம் மற்றும் பாதகத்தை தீர்மானிக்கின்றன. தொழில் மற்றும் ஜீவன ஸ்தானம் என்பது ஒருவருக்கு வாழ்வாதாரத்தையும், கவுரவத்தையும் தரும் மிக முக்கியமான பாவகம். ஒருவருக்கு தொழில் எப்போது அமையும், ராசிகள் மற்றும் கிரகங்களின் அடிப்படையில் என்னென்ன தொழில்கள் சாதகமாக இருக்கும் என்பது பற்றிய பார்க்கலாம்.
தொழில் அமையும் காலம் எப்போது?
ஒருவருக்கு நிலையான வேலை அல்லது தொழில் தொடங்குவதற்கான காலம் அவருடைய ஜாதகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தசா புத்திகள் மற்றும் கோச்சார கிரகங்களின் (Transit) நிலையை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது.
தசா புத்தி காலம்: ஒருவரின் ஜாதகத்தில் 10-ம் பாவக அதிபதி, 10-ம் பாவகத்தில் அமர்ந்த கிரகம் அல்லது 10-ம் பாவகத்தைப் பார்க்கும் கிரகங்களின் தசா புத்திகள் காலங்கள் நடக்கும் போது ஜாதகருக்கு புதிதாக தொழில் அல்லது வேலை அமையும்.
மேலும், லக்ன அதிபதி, 2-ம் பாவக அதிபதி (தன ஸ்தானம்), 11-ம் பாவக அதிபதி (லாப ஸ்தானம்) ஆகியோரின் தசா, புத்திகளும் ஜாதகரின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தொழிலில் சிறப்பான சூழலை ஏற்படுத்தித் தரும்.
கோச்சார கிரகங்களின் பங்கு: ஜீவன காரகன் என அழைக்கப்படும் சனி பகவான், கோச்சாரத்தில் ஜாதகத்தின் 10-ம் பாவகத்தையோ, 10-ம் பாவக அதிபதியையோ அல்லது லக்னத்தையோ தொடும்போதோ அல்லது பார்க்கும்போதோ தொழிலில் பெரிய மாற்றங்கள், புதிய பொறுப்புகள் அல்லது புதிய வேலை கிடைக்கும். தனகாரகன் என அழைக்கப்படும் குரு பகவானின் பார்வை, 10-ம் பாவகம், லக்னம் அல்லது லக்ன அதிபதி மீது விழும் காலம் ஜாதகர் தொழில் தொடங்குவதற்கும், வேலையில் பதவி உயர்வு பெறுவதற்கும் மிகச் சிறந்த காலமாக பார்க்கப்படுகிறது.
ராசிகள் ரீதியாக சாதகமான தொழில்கள்: நெருப்பு, நிலம், காற்று, நீர் ஆகியவைகளை குறிக்கும் ராசிகளின் தன்மைகளைக் கொண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன தொழில் அமையும் என்பதை அறியலாம்.
மேஷம், சிம்மம், தனுசு (நெருப்பு ராசிகள்): இந்த ராசிகளைக் கொண்டவர்கள் தலைமைப் பண்பும், சுறுசுறுப்பும் கொண்டவர்களாக இருப்பார்கள். பாதுகாப்புத் துறை (காவல், ராணுவம்), அரசு உயர் பதவிகள், அரசியல், பொறியியல், விளையாட்டுத் துறை, மேலாண்மை, நெருப்பு மற்றும் மின்சாரம் சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு சாதகமாக அமையும்.
ரிஷபம், கன்னி, மகரம் (நில ராசிகள்): இந்த ராசிகளைக் கொண்டவர்கள் நிதானமும், உழைப்பும், நடைமுறை சாத்தியங்களை நம்புபவர்களாகவும் இருப்பார்கள். விவசாயம், ரியல் எஸ்டேட், கட்டுமானம், வங்கி மற்றும் நிதித்துறை, ஆடிட்டிங், உணவு வணிகம், ஆடை மற்றும் ஆபரணம் சார்ந்த தொழில்கள் ஒருவருக்கு சிறப்பான தொழிலாக அமையும்.
மிதுனம், துலாம், கும்பம் (காற்று ராசிகள்: இந்த ராசிகளை கொண்டவர்கள், புத்திசாலித்தனம், பேச்சுத் திறமை மற்றும் கற்பனை வளம் மிக்கவராக இருப்பார்கள். தகவல் தொழில்நுட்பம் (IT), ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறை (Media), சட்டம் (Law), ஆசிரியர் பணி, விளம்பரம், கணக்கு வழக்குகள், தூதரகப் பணிகள், ஆன்லைன் வர்த்தகம் சார்ந்த தொழில்கள் ஜாதகருக்கு சாதகமானதாகவும், சிறப்பான தொழிலாகவும் இருக்கும்.
கடகம், விருச்சிகம், மீனம் (நீர் ராசிகள்): இந்த ராசிகளை கொண்டவர்கள், கற்பனைத்திறன், இரக்க குணம் மற்றும் சேவை மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். திரவப் பொருட்கள் வணிகம் (பால், எண்ணெய், குடிநீர்), கடல்சார் தொழில்கள் (Shipping, குறிப்பாய் ஏற்றுமதி- இறக்குமதி, மருத்துவம், மருந்தகம் (Pharmacy), கலைத்துறை (சினிமா, இசை) மற்றும் ஹோட்டல் தொழில் இந்த ராசிக்கார்களுக்கு நல்ல வளர்ச்சியைத் தரும்.
கிரக ரீதியாக அமையும் தொழில்கள்: ஒருவருடைய ஜாதகத்தில் 10-ம் பாவகத்துடன் வலுவான தொடர்பு கொள்ளும் கிரகமே அவருக்கு தொழில் சார்ந்த நடவடிக்கையைத் தீர்மானிக்கிறது.
சூரியன்: அரசு வேலை, அரசியல், மருத்துவத் துறை, நிர்வாக அதிகாரி, தங்கம் மற்றும் ரத்தின வியாபாரம், தந்தையின் வழித் தொழில்கள் சூரிய பகவானின் காரகத்தைக் குறிக்கும்.
சந்திரன்: பால் மற்றும் பால் பண்ணை, ஹோட்டல் மற்றும் உணவுத் தொழில், நர்சிங் (மருத்துவ சேவை), முத்து, ஜவுளித் தொழில், டிராவல்ஸ், கலைத்துறை சார்ந்த தொழில்கள் சந்திரன் பகவானின் காரகத்தை குறிக்கும்.
செவ்வாய்: ராணுவம், காவல்துறை, தீயணைப்புத் துறை, அறுவை சிகிச்சை நிபுணர், பொறியியல், கட்டிடக்கலை, ரியல் எஸ்டேட், செங்கல், இரும்பு மற்றும் ஆயுதத் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் செவ்வாய் பகவானை குறிக்கும் காரகத் தொழில்கள் ஆகும்.
புதன்: ஆடிட்டர், வங்கித் துறை, கணிதம், ஜோதிடம், எழுத்து மற்றும் பத்திரிகை, சாப்ட்வேர், கமிஷன் மற்றும் ஏஜென்சி, தூதரகப் பணி, ஆசிரியர் ஆகிய தொழில்கள் புதன் பகவானுக்கு உரிய காரகத் தொழில்களில் சில.
குரு: ஆசிரியர், பேராசிரியர், ஆன்மிகச் சொற்பொழிவாளர், நீதிபதி, அறக்கட்டளைகள், வங்கி மேலாளர், நிதி ஆலோசகர், பதிப்பகம் உள்ளிட்டவை குரு பகவானின் காரகத் தொழில்களாகும்.
சுக்கிரன்: சினிமா, நாடகம், ஆடை வடிவமைப்பு மற்றும் அழகு நிலையம், ஆபரணங்கள், வாசனைத் திரவியங்கள், ஆடம்பர வாகனங்கள், கலைப் பொருட்கள் உள்ளிட்டவை சார்ந்த தொழில்கள் சுக்கிரனை குறிக்கும்.
சனி: இரும்பு, இயந்திரங்கள், சுரங்கத் தொழில், எண்ணெய் வித்துக்கள் (பெட்ரோல்/டீசல்), துப்புரவுத் தொழில், உழைப்பு சார்ந்த மற்றும் தோல் பொருட்கள் சார்ந்த தொழில்கள் சனிபகவானின் காரகத்தில் வரும்.
ராகு: விண்வெளித் துறை, விமானத் துறை, ஆன்லைன் விளையாட்டு, ரசாயனத் தொழில், இறக்குமதி வணிகம், கள்ளச்சந்தை/சூதாட்டம், தோல் நோய் மருத்துவம் உள்ளிட்டவை ராகு பகவானைக்கு குறிக்கும்,
கேது: ஆன்மிகம், தியான மையங்கள், இயற்கை மருத்துவம், மூலிகை வணிகம், கம்ப்யூட்டர் கோடிங், தையல் தொழில், மத குரு, மோட்சம் மற்றும் தத்துவ ஆராய்ச்சி உள்ளிட்டவை கேது பகவானின் காரகங்களைக் குறிக்கும்.
சுய தொழிலா? அடிமை தொழிலா?: ஜாதகத்தில் 6-ம் பாவகம் வலுவாக இருந்தால் ஒருவர் ‘வேலைக்கு’ செல்வார் என்பதும் 7 மற்றும் 10-ம் பாவக வீடுகள் வலுவாக இருந்தால் அவர் ‘சுய தொழில்’ செய்து முதலாளியாக இருப்பார் என்பது ஜோதிட விதிகளில் ஒன்றாகும்.

