திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஊத்துக்காடு கிராமத்தில் அமைந்திருக்கும் பழமைவாய்ந்த அருள்மிகு குங்கும நாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலின் நூதன ராஜகோபுர மகா கும்பாபிஷேகம், இன்று கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த சில நாட்களாகவே கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மங்கல வாத்தியங்கள் முழங்க, புனித நீர் ஊற்றப்பட்டு ராஜகோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
வானுயர்ந்த கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டபோது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஹர ஹர மகாதேவா”, “ஓம் நமசிவாய” என முழக்கமிட்டு பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர். விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் மற்றும் கிராம மக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறையினரும், ஊத்துக்காடு கிராம மக்களும் இணைந்து இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த கும்பாபிஷேக நிகழ்வில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கைலாசநாதரின் அருளைப் பெற்றனர்.

