ராணிப்பேட்டை மாவட்டம், செம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதியம்மன் சமேத தர்மராஜா திருக்கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக கோவிலில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் யாகசாலை பூஜைகள் போன்ற பல்வேறு ஆன்மிக வழிபாடுகள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றன.
விழாவின் முக்கிய நாளான இன்று, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோவில் விமான கலசங்களுக்கும், த்ரௌபதியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் முறைப்படி புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம், வண்ண மலர் அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.
இந்த வைபவத்தில் செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கோவில் அறங்காவலர்கள், விழாக்குழுவினர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

