திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு சமயவல்லி நாகநாத சுவாமி திருக்கோயிலில், ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு உற்சவங்கள் விமரிசையாக நடைபெற்றன.
இந்த நன்னாளையொட்டி, உற்சவர் முருகப்பெருமானுக்கு வள்ளி மற்றும் தெய்வானையுடன் இணைந்து சிறப்பு பூஜைகளும், கண்கவர் மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
தேரோட்டத்தின் போது, திரளாகக் கூடியிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என முழக்கமிட்டனர். மேளதாளங்கள் முழங்க, காவடிப் பாடல்கள் மற்றும் முருகனின் புகழ்பாடும் பக்திப் பாடல்களைப் பாடியபடி பக்தர்கள் உற்சாகத்துடன் வலம் வந்தனர். இந்தத் திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியைத் தரிசனம் செய்து அருளாசி பெற்றனர்.

