ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நெல்லிசெட்டி தெருவில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கங்கையம்மன் திருக்கோவிலில், ஆடி மாத திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இக்கோவிலின் 13-ஆம் ஆண்டு திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.
ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்குப் பணம், பழங்கள், வெற்றிலை மற்றும் பல்வேறு சிறப்புப் பொருட்கள் மூலம் அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். இக்கோவிலின் ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையான நேற்று, அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன.
இதையொட்டி, அதிகாலையில் அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பன்னீர் மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கருவறை முழுவதிலும் சுமார் 1 டன் எடையளவிலான பல்வேறு வகையான காய்கறிகளைக் கொண்டு அம்மனுக்கு நேர்த்தியான முறையில் பிரம்மாண்டமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
காய்கறி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனின் திருவுருவத்தைக் கண்டு தரிசிக்க, வாலாஜாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை மனமுருகி வழிபட்டுச் சென்றனர்.

